Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு ரிஷபம் ராசி பலன்கள் 2016

ரிஷபம்

எடுத்த முடிவில் பின்வாங்காத நேர்மையாளர்களான நீங்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பவர்கள். மற்றவர்களின் ரகசியங்களை கட்டிக்காப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் இந்த துர்முகி ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். 9.9.2016 முதல் 25.10.2016 வரை உங்களின் விரைய&சப்தமாதிபதியான செவ்வாய் 8ல் மறைவதாலும், 19.9.2016 முதல் 13.10.2016 வரை உங்களின் ராசிநாதனான சுக்கிரன் 6ல் மறைவதாலும் முன்கோபம், வீண் அலைச்சல், தொண்டை வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து போகும்.

இந்தாண்டு முழுக்க ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் அரசாங்கத்திற்கு கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது. தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். 1.8.2016 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது.

தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ல் நுழைவதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்தவரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும்.
 
வியாபாரத்தில்
 ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. இந்தாண்டு முழுக்க கேது 10ல் தொடர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே!
 தடைப்பட்ட உயர்கல்வியை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வருடத்தின் இறுதியில் கல்யாணம் முடியும். ஃபேஸ் புக், டிவிட்டரை எல்லாம் கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி செய்வார்கள். தாயாரை தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். அல்சர், யூரினரி இன்ஃபெக்ஷன், முகப்பரு வந்துச் செல்லும்.

மாணவ-மாணவியர்களே! 
விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் இறங்காதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

கலைத்துறையினரே!
 வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும். 

விவசாயிகளே!
 
வற்றிய கிணறு சுரக்கும். புதிய சாகுபடி திட்டத்தில் சேர்ந்து மாற்று பயிர்களால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்: 
வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


Also Read




No comments:

Post a Comment